பீல்ட் மார்ஷல் நிகழ்வில் வெறுமையாக கிடந்த வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான ஆசனங்கள்
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்ட அரசாங்க நிகழ்வில், கொழும்பில் உள்ள பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் பங்கேற்கவில்லை.
நேற்று பிற்பகல் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டதுடன், அவருக்கு பீல்ட் மார்ஷலுக்குரிய கோலையும் (பற்றன்) கையளித்தார்.
இந்த நிகழ்வில், சிறிலங்கா அமைச்சர்கள், சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு தனியான ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. எனினும், நேற்றைய நிகழ்வில் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்கவில்லை.
இதனால், தூதுவர்களுக்காக போடப்பட்டிருந்த ஆசனங்கள் பெரும்பாலும் வெறுமையாகவே காட்சியளித்தன.
தூதுவர்களுக்கான ஆசன வரிசை வெறுமையாக இருப்பதை அவதானித்த பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், அவற்றின் பின் வரிசையில், அணிவகுப்புக்காக சென்ற படையினரை அமர்த்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்டமைக்காகவே, சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு அளிக்க்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தப் போரில், போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.