வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளே மகிந்தவை தோற்கடித்தன – என்கிறார் கோத்தா
சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச ஆட்சியை அகற்றுவதில் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளின் தலையீடுகள் இருந்துள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தன்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக, எதிரணியை ஒன்றுபடுத்திப் பலப்படுத்துவதில், இந்தியாவின் றோ, மற்றும் மேற்குலகப் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டிருந்ததாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
இதுகுறித்து, கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,
“முன்னைய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டு முன்னுரிமை சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள், அதனைக் கவிழ்த்துள்ளன.
பிரதான நாடுகள் தமது எல்லைகளுக்கு வெளியே இதுபோன்ற இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறப்பு பிரிவுகளை கொண்டிருக்கின்றன.
எனவே, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்க முடியும்.
சில நாடுகள் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களை பதவி கவிழ்க்க முனைகின்றன.
பல ஆண்டுகளாகவே உலகில் இத்தகைய தலையீடுகள் இருந்து வருகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.