அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்
தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்கா உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது கொழும்பு பயணமாக இதுவாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நிஷா பிஸ்வால் சிறிலங்காவுக்கு இரண்டாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ள சூழலிலும், புதிய அரசாங்கம் சிறிலங்காவில் பதவிக்கு வந்துள்ள நிலையிலும், அவரது இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை முன்வைப்பதற்கு முன்னதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்டப் பிரமுகர்கள் கொழும்புக்கு பயணம் மேற்கொள்வது வழக்கமாகும்.
இதனிடையே, நிஷா பிஸ்வாலின் பயணத்தின் போது, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்திப்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வொசிங்டனுக்கு மேற்கொள்ளும் பயண நாள் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.