ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு விசாரணை – சிறிலங்கா திட்டம்
சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், ஐ.நாவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை எமது புதிய முயற்சிகள், ஒத்திவைக்கக் கூடும் அல்லது நிறுத்தக் கூடும்.
உள்நாட்டு விசாரணையை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, அறிக்கையை நிறுத்தி வைப்பதற்கான அவர்களின் தெரிவுகளில் ஒன்றாக அமையலாம்.
ஐ.நா விசாரணைகள் தலைக்கு மேல் தொங்குவதை சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
இந்தச் சூழலில் விரைவாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்படுவது சிறிலங்காவுக்கு நல்லது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.