ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் சிறிலங்கா
தமது காலக்கெடுவுக்குள் சட்டவிரோத ஆழ்கடல் மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக, சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
இதையடுத்து, சிறிலங்கா கொடி தாங்கிய கப்பல்களினால், பிடிக்கப்படும் கடலுணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்றொழில் அமைச்சர்களின் பேச்சுக்களின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சூரை மற்றும் வாள் மீன் ஏற்றுமதியில் சிறிலங்காவே இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது.
எனினும், சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் 2012ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவை எச்சரித்து வந்தது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.