தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள் – மைத்திரிபால
அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் சித்திரவதைக்குட்படுத்திக் கொலை செய்யும் விரிவான திட்டத்தை முன்னைய ஆட்சியாளர்கள் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
பொலன்னறுவவில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், வாழ்வதற்குத் தனக்கு ஒரு வீடும் இல்லை என்று மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.
நான் தோற்கடிக்கப்பட்டிருந்தால், எனக்கு ஒரு வீட்டைக் கொடுத்திருந்திருப்பீர்களா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.
எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்த போதே, எனது உயிரைத் தியாகம் செய்வதற்கான போராட்டத்துக்குத் தயாராகி விட்டேன்.
நான் தோற்கடிக்கப்பட்டிருந்தால், என்னை மட்டுமன்றி எனது பிள்ளைகளையும், கைது செய்யவும் சித்திரவதை செய்து கொல்லவும் முன்னைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை நான் ஏற்றுக் கொள்ளாது போயிருந்தால், 100 நாள் செயற்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருந்திருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.