இலங்கையர்கள் மீது தீவிர கண்காணிப்பு – ஒபாமாவைக் குறிவைக்கலாம் என எச்சரிக்கை
இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கா அதிபர் ஒபாமாவை சிறிலங்காச் சேர்ந்தவர் குறிவைக்கலாம் என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இன்றுகாலை 10 மணியளவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வரவுள்ளார். நாளை புதுடெல்லியில் நடைபெறும் இந்தியக் குடியரசு நாள் நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார்.
ஒபாமாவின் இந்தியப் பயணத்தைச் சீர்குலைக்க இஸ்லாமிய தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறிப்பாக சிறிலங்கா அல்லது மாலைதீவை சேர்ந்தவர்களைக் கொண்டு ஒபாமா மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தும் இதுபோன்றதொரு திட்டம் இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இந்தநிலையில், ஒபாமா மீது சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் குறிவைக்கலாம் என்று புதுடெல்லி காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நீண்டகால நுழைவிசைவுடன் தங்கியிருப்பவர்கள் மற்றும் நுழைவிசைவு காலாவதியான பின்னர் தங்கியிருப்பவர்கள் குறித்து, தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் மற்றும் மாலைதீவு நாட்டவர்களை உன்னிப்பாக கண்காணிக்கும்படி, டெல்லி, உத்தரப்பிரதேச காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.