அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்து கொழும்பில் பேசுவார் மோடி
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளைத் தாயகம் திருப்பி அனுப்புவது குறித்து, சிறிலங்காவின் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, இந்தியப் பிரதமர், அதன்போது, அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்து பேச்சுக்களை நடத்துவதில் முக்கிய கவனம் செலுத்துவார் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் சிறிலங்கா பயண நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், வரும் மார்ச் மாதம் அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார் என்று செய்திகள் கூறுகின்றன.
இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத்தின் போது, கொழும்பு – கண்டி இடையில் இரட்டை தொடருந்துப் பாதையை இந்தியாவின் பங்களிப்புடன் அமைப்பது குறித்தும், பதுளை, நுவரெலிய மாவட்டங்களில், இந்திய வம்சாவளித் தொட்டத் தொழிலாளர்களுக்கு 4000 வீடுகளை அமைத்துக் கொடுப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படும்.
அத்துடன், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலும், கொழும்புக்கும் தூத்துக்குடிக்கு இடையிலும், மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்தும், இந்தப் பயணத்தின் போது பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.