மேலும்

கோத்தாவைக் காக்க முயன்ற இராணுவப் பேச்சாளர் நீக்கம் – புதிய பாதுகாப்பு செயலருக்கும் நெருக்கடி

gotaசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் பாதுகாக்கும் வகையில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய பாதுகாப்புச் செயலரிடமும் சிறிலங்கா அதிபரால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் பெயரில் தனியான திறக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்த 8 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு மாற்ற, புதிய  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.

கோத்தாபய ராஜபக்சவினால், திறைசேரியின் நடைமுறைகளுக்கு முரணாக தனியான வங்கிக்கணக்கில் 8 பில்லியன் ரூபா பேணப்பட்டு வந்தது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அது கோத்தாபய ராஜபக்சவின் பெயரில் வைப்பிலிடப்பட்டிருக்கவில்லை என்றும், சட்டபூர்வமாக பாதுகாப்பு செயலரின் பெயரிலேயே அந்த கணக்கு பேணப்பட்டதாகவும், இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரியவும், பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலர் பஸ்நாயக்கவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பிரிகேடியர் ருவன் வணிகசூரிய உடனடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் பஸ்நாயக்கவை அழைத்து, அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருக்கிறார்.

இதனிடையே புதிய இராணுவப் பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளராகவும், கூட்டுப்படைகளின் தலைமையகத்தின் பேச்சாளராகவும் பிரிகேடியர் ஜெயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவிகளை முன்னர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பாக இராணுவப் பேச்சாளருக்குத் தெரியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், போர் நடைபெறாத நிலையில், முப்படைகளினதும் பேச்சாளர் பதவிகள் தேவையற்றது என்பதால், அந்தப் நீக்குவது குறித்தும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *