மீண்டும் ஜெனரல் ஆனார் சரத் பொன்சேகா – குடியுரிமையை வழங்கவும் உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னைய ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மீண்டும் ஜெனரல் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து, சரத் பொன்சேகா மீது இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனது குடியுரிமை மற்றும் இராணுவப் பட்டம் மற்றும் விருதுகள் அனைத்தையும் இழந்ததுடன், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.
பின்னர், 2012ம் ஆண்டு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட போதிலும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமையோ, இராணுவ பட்டங்கள் மற்றும் விருதுகளோ மீளளிக்கப்படவில்லை.
இந்தநிலையிலேயே, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமை மற்றும் ஜெனரல் பட்டம் உள்ளிட்ட அனைத்தையும் மீளளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் முழுமையான பொதுமன்னிப்பும் அளிக்கப்பட்டுள்ளது.