பிரதேசசபை உறுப்பினரை முழந்தாளிட வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும கைது
அகலவத்தையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேசசபை உறுப்பினரை தாக்கி, முழந்தாளிட வைத்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்தையில், நேற்று முன்தினம் காலையில், சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான ஆறுமுகம் புஸ்பகுமாரைத் தாக்கி, அவரை முழந்தாளிட வைத்திருந்தார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெரும.
பாலித தெவாரப்பெருமவும் அவரது ஆதரவாளர்களும், பிரதேச சபை உறுப்பினரைத் தாக்கி, கொடிகளை அறுத்து வீழ்த்தி, சுதந்திரக் கட்சி செயலகம் மீது கற்களை வீசியது தொடர்பான காணொலிப் பதிவு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் முறையிட்டிருந்தார்.
இதனிடையே, இந்தச் சம்பவம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவாரப்பெருமவைக் கைது செய்ய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இன்று காலை அவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், முன்னைய அரசாங்க ஆதரவாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடியாக எழுந்துள்ளது.