தமிழர்களுக்கு சுயாட்சி பற்றிய ரணிலின் கருத்து – கவனத்தில் கொண்டுள்ளதாம் இந்தியா
தமிழ் மக்களுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக் குறித்து இந்திய அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க புதிய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறியதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “இது ஒரு முக்கியமான கருத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இதனைக் கருத்தில் கொண்டுள்ளது.
சிறிலங்காவுடன் நாம் நீண்ட நட்புறவைக் கொண்டுள்ளோம். எமது உறவுகள் தொடர் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தாம் சுயாட்சி வழங்குவது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
என்டிரிவிக்கு அளித்த செவ்வியில், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தயார் என்றே தாம் குறிப்பிட்டதாகவும், அதனை சுயாட்சி என்று இந்திய ஊடகங்கள் தவறாக அர்த்தம் கற்பித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.