வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம்
சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக, இவரைப் புதிய அரசாங்கம் நியமித்துள்ளது.
இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரான மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்குப் பதிலாக புதிய ஆளுனர் ஒருவரை நியமிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள பாலிஹக்கார, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலராவார்.
அத்துடன் ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
38 ஆண்டுகள் சிவில் மற்றும் இராஜதந்திர சேவையில் பணியாற்றியவர்.
2002ம் ஆண்டு விடுதுலைப் புலிகளுடனான ரணில் விக்கிரமசிங்க அரசின் பேச்சுக்களில் பங்கெடுத்தவர் என்பதுடன், அப்போது அமைக்கப்பட்ட அரசாங்க சமாதான செயலகத்தின் பதில் பணிப்பாளராகவும் பதவி வகித்தவர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் பாலிஹக்கார பணியாற்றியுள்ளார்.