மைத்திரிக்கு சீனாவும் கை நீட்டுகிறது
சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், புதிய அரசாங்கம் சீனாவுடன் நட்புரீதியான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ,
“சிறிலங்காவில் சீனா முன்னெடுத்து வரும் திட்டங்களை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் தனது ஆதரவை வழங்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் சீனா பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் இருதரப்பு ஒத்துழைப்புடனான அபிவிருத்தி திட்டங்கள், இருநாட்டு மக்களுக்குமே நன்மை தருவன என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கம் சீனாவுடன் நட்புரீதியான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுடன் சீனா கடைப்பிடித்த ஆழமான நட்புறவுக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.