யார் வென்றாலும் முதலில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் – பாஜக
நாளை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர், முதலாவதாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாஜகவின் தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களான, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ள விஜய் ஜோலி, எவர் வெற்றி பெற்றாலும் முதலில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் ஜனநாயகம் நிலை பெறுவதற்கு அமைதியான நீதியான, நியாயமான தேர்தல் அவசியம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதிகாரங்களைப் பகிர்வது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை மீளத் தொடங்குவது, தீர்க்கப்படாமல் எஞசியிருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பன, சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்றும் விஜய் ஜோலி தெரிவித்துளளார்.