திடீரெனப் பலமிழந்தவராக தோற்றமளிக்கும் சிறிலங்கா அதிபர் – பிபிசி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இளைத்து – பலவீனமானவர் போலத் தோற்றமளிப்பதாக, பிபிசியின் செய்தியாளர் சாள்ஸ் ஹவிலன்ட் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிரணியினர், பொருத்தமான வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு முன்னதாக, தேர்தலை நடத்தி விடவேண்டும் என்று முந்திக் கொண்டு தேர்தலை அறிவித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறிலங்காவில் ஆளும்கட்சியை நோக்கி கட்சி தாவுவது வழக்கம் என்றாலும், தற்போது நிலைமை தலைகீழாக மாறி, எதிரணியை நோக்கி ஆளும்கட்சியினர் தாவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
69 வயதான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இளைத்துப் போனவராகவும் பலவீனமானவராகவும் தென்படுகிறார், அண்மையில் அவர் ஒரு பரப்புரைக் கூட்டத்தைப் பாதியிலேயே கைவிட நேர்ந்தது என்றும் சார்ள்ஸ் ஹவிலன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகம் கவர்ச்சியற்றவராக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேன தற்போது, வேகமாக முன்னிலை வகித்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், மகுடத்தை அமைதியாக ஒப்படைப்பாரா என்று கேள்வி இருப்பதாகவும், பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.