மகிந்தவின் திட்டத்துக்கு இராணுவம் ஒத்துழைக்காது – அனுரகுமார திசநாயக்க
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஜேவிபி அதற்கெதிராக போராடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
“தோல்வியுற்றாலும் ஆட்சியை ஒப்படைக்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
அவ்வாறாயின், தோல்வியுற்றவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் நாட்டை ஆள, வெற்றி பெற்றவர் பொலன்னறுவவில், வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்படும்.
உலகில் இதுபோன்று வேறேங்கும் நடந்துள்ளதா?
மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார். பெரும்பாலான இராணுவத்தினர் அவருக்கு எதிராகவே உள்ளனர்.
இந்தச் சூழலில் பலாத்காரமாக அதிகாரத்தை தன் கையில் வைத்திருப்பதற்கு அவருக்கு வழியில்லை.
இராணுவத்தைப் பயன்படுத்தி அவர், அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தால், ஜேவிபி மக்களுடன் இணைந்து நின்று, நாட்டின் இறைமயைப் பாதுகாக்க போராடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.