வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கமாட்டேன் – மைத்திரி உறுதிமொழி
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நண்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“வரும் வியாழக்கிழமை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது முழுப் பொறுப்பாகும்.
தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். நாட்டைப் பிரிக்கவோ, விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கவோ இடமளிக்கப்படமாட்டது.
நாட்டைப் பிரிப்பது தொடர்பாகவோ, அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாகவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடனோ நாம் எந்த உடன்பாடு செய்து கொள்ளவில்லை.
100 நாள் செயற்திட்டத்தை அடிப்படையாக கொண்ட தேர்தல் அறிக்கையின் கீழ் தான் அரசியல் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்தன.
சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கையை நான் பலப்படுத்துவேன். எல்லா நாடுகளுடனும் நல்ல உறவுகைளைப் பேணி, அவற்றின் இதயத்தில் இடம்பிடிப்பேன்.
பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதையும், அங்கீகாரம் அளிக்கப்படுவதையும், எதிரணி உறுதி செய்யும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.