நாட்டை விட்டுத் தப்பியோடமாட்டேன் – மகிந்த வாக்குறுதி
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் சிறிலங்காவை விட்டுத் தப்பி ஓடமாட்டேன் என்றும், தொடர்ந்து நாட்டிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
பொலன்னறுவவில் நேற்று தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் அவர், தேர்தலில் தோல்வியுற்றால், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல விடமாட்டோம் என்றும், அனைத்துலக விமான நிலையத்தை மூடுவோம் என்றும் எதிரணியினர் கூறிவருவதற்கு பதிலளித்து உரையாற்றினார்.
“விடுதலைப் புலிகளிடம் இருந்து ஓடாத ஒருவரான நான், சிறிலங்காவை விட்டு ஓடமாட்டேன்.
தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன.
ஆனால் நானே வெற்றி பெறுவேன், எதிரணியின் தேர்தல் அறிக்கை குப்பைக் கூடைக்குள் வீசப்படும்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓய்வு பெற்ற போது, என்னைச் சந்தித்து, பிரியாவிடை வாழ்த்துக் (goodbye) கூறிவிட்டு சென்றார்.
அப்போது, அவரிடம் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று கூறி மரியாதையான முறையில் சென்றார்.
ஆனால், மைத்திரிபால சிறிசேன எதுவும் கூறாமலேயே அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்றார்.
அவர் விலகிச் செல்வதற்கு முதல் நாள் இரவு கூட என்னுடன் இராப்போசனம் உட்கொண்டார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.