மேலும்

வியாழன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம் – தோல்வி அச்சம் மகிந்தவைத் தொற்றியது

mahindaஅதிபர் தேர்தல் முடிந்தவுடன், வரும் 8ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது 100 நாள் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் தடுக்கும் நோக்கிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்க மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

இந்த தகவல் எதிரணியின் உயர்மட்டத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தாம் வெற்றி பெற்றால், 100 நாட்களுக்குள் சிறிலங்கா அதிபரின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாக, மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அதிபரின் அதிகாரங்களைக் குறைப்பது சிக்கலாகும்.

எனினும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் தொடர்பாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் எவரும் கருத்து வெளியிட மறுத்து வருகின்றனர்.

அதேவேளை, அதிபர் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், புதிய நாடாளுமன்றத்துக்கான  தேர்தலை நடத்துவதை விட தமக்கு வேறு தெரிவு இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றாலும் கூட, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவருக்கு உதவ மாட்டார்கள் என்று அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பை திருத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்றும், அது சாத்தியமாகாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிட ஆளும்கட்சி அமைச்சர்கள் பலரும் மறுத்துள்ள நிலையில், அவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைக்கப்படுவதை உறுப்பினர்கள் விரும்பமாட்டார்கள் என்று தன்னை வெளிப்படுத்த விரும்பான அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் நாளன்று, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரங்கள் உள்ளதாக, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *