முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்பம் – ஒப்புக்கொண்டார் ஹக்கீம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமது கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்புக்கொண்டுள்ளார்.
கண்டியில் நேற்றுமாலை நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக, கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
இது ஒரு இலகுவான விடயம் அல்ல. இதுபோன்ற நேரங்களில் எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்கொள்கின்ற சவால் தான்.
பிளவுகள் ஏற்படும். பலர் கட்சி தாவுவர். இதுபோன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். கடவுள் எம்மைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்
அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு, பிரதமர் டி.எம்.ஜெயரட்ண என்னிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னரே அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க முடியும்.
நல்லாட்சி, போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகள், நீதித்துறை விவகாரங்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நாளை அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ளதால், இன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.