மகிந்தவைக் கூண்டில் ஏற்றத் தயாராகிவிட்டார் சம்பிக்க
சிறிலங்கா அரசாங்கம் பொருளாதாரத்தை நாசப்படுத்தி விட்டதாக, குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், முன்னாள் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க.
“பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்காதததன் விளைவாக, சிறிலங்கா அரசாங்கத்தினால், இந்த ஆண்டுக்காக திட்டமிடப்பட்ட வருமானத்தில் 25 வீதத்தைப் பெறமுடியவில்லை.
2014ம் ஆண்டு 1400 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பெற அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், 1100 பில்லியன் ரூபா மட்டும் தான் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
பெறப்பட்டுள்ள வருமானம், கடன்தவணைகளை மீளச் செலுத்தவோ, கடன்களுக்கான வட்டியை செலுத்தவோ போதுமானதாக இல்லை.
எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் இரண்டு, மூன்று வீதம் வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுண்டு. ஆனால், 25 வீதமான வருமானத்தை ஈட்டத் தவறுவது பாரதூரமான பிரச்சினையாகும்.
அரசாங்கம், 1100 பில்லியன் ரூபாவை மட்டுமே வருமானமாகப் பெற்றுள்ள நிலையில், கடன்களை மீளச்செலுத்தவும், கடன்களுக்கான வட்டியைச் செலுத்தவும், 1130 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
அரசாங்கத்தின் செலவினங்கள் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்றவகையில் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை.
அபிவிருத்தித் திட்டங்கள் என்று கூறப்படுபவை, மற்றும் அறிவிக்கப்படுகின்ற மானியங்கள் எல்லாமே 7 வீத வட்டிக்குப் பெறப்படும் கடன்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
இது மிகப்பெரிய வெளிநாட்டுச் சதித் திட்டம். பில்லியன் கணக்கான வெளிநாட்டுப் பணமுறிகள் அமெரிக்க முதலீட்டாளர்களின் வசம் உள்ளது.
இவை திருப்பிக் கொடுக்கப்பட்டால், நாடு மிகமோசமான நிலைமைக்குள் தள்ளப்படும். பொருளாதார ரீதியாக பாதுகாப்பு இல்லை.
30 ஆண்டுகாலப் போரினால் அழிக்கப்பட்டதை விட கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதியமைச்சு மோசமான அழிவுகளை நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
அரசாங்கம் தனது சுமையை குறைப்பதற்காக பெற்றோல், டீசலின் மீது பெருமளவில் வரிவிதிக்கிறது. இந்த மோசடிப் பேர்வழிகள் தண்டிக்கப்படவேண்டும்.
நாம் கணக்காய்வு தொழில்நுட்பக் குழுவொன்றை நியமித்து, தவறு செய்தவர்களை கண்டறிந்து அவர்களை தண்டிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.