அரசியல் பொறியில் விழவேண்டாம் – கத்தோலிக்க மதகுருக்கள் பாப்பரசரிடம் கோரிக்கை
பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்தை பிற்போடுமாறு சில கத்தோலிக்க மதகுருக்களும், சாதாரண மக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாப்பரசரின் பயணத்தை அண்டி அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், வன்முறைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதாலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத் தலைவர் வண.லியோ பெரேரா, ஆயர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், கடந்த காலங்களில் சிறிலங்காவில் தேர்தல்களுக்கு பின்னர் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, தேர்தலுக்குப் பின்னர் கொந்தளிப்பான சூழலில் பாப்பரசர் வருகை தருவது அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 5 நாட்கள் கழித்து பாப்பரசரின் பயணம் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், அரசியல் பொறிக்குள் பாப்பரசர் வீழ்வதை அனுமதிக்க வேண்டாம் என்று வத்திக்கானுக்கு கடிதம் எழுதவுள்ளதாக, கிறிஸ்தவ ஒற்றுமை அமைப்பு தெரிவித்துள்ளது.