போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து கவலையில்லை – என்கிறார் மகிந்த
தன் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து தான் கவலை கொள்ளவில்லை என்று மாத்தறையில் நேற்றுமாலை நடந்த கூட்டம் ஒன்றில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,சிறிலங்காவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும், அதுபற்றி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“நாட்டுக்குள் இருக்கும் ஒரு குழுவினர், என்னை ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முனைகின்றனர்.
ஆனால், நான் இந்த முயற்சிகளையிட்டுக் கவலை கொள்ளப் போவதில்லை.
ஏனென்றால், பேய்களுக்குப் பயந்தால் என்னால் சுடுகாட்டில் வீடுகட்ட முடியாது.
வரும் அதிபர் தேர்தலில் என்ன எவராலும் இலகுவாகத் தோற்கடிக்க முடியாது என்பதால் தான், இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
தமது விருப்பப்படி ஆடுகின்ற ஒரு பொம்மையை ஆட்சியில் அமர்த்துவதில், சில குறிப்பிட்ட நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால், இத்தகைய முயற்சிகளுக்கு மக்கள் எப்போதும் எதிராகவே உள்ளனர்.
என்னைத் தோற்கடிப்பது மிகவும் கடினமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.