பாதுகாப்பு விவகாரங்களில் தவறுகளை சகிக்க முடியாது – இந்திய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
பாதுகாப்பு விவகாரங்களில் தவறுகளை இந்தியா சகித்துக் கொண்டிருக்காது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குர்கானில் இந்திய கடற்படையின் தகவல் முகாமைத்துவ ஆய்வு நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ நாம் தாக்குதலை விரும்பவில்லை.
இந்தியா வேறு எந்தவொரு நாட்டையும் ஆட்சி செய்யவில்லை.
இராமாயண காலத்தில் கூட, இலங்கைக்குச் சென்ற இராமன், அதனை ஆட்சி செய்யவில்லை. அதனை ஆட்சி செய்யும் பொறுப்பை விபீசணனிடம் கொடுத்தார்.
இந்தியா எந்தவொரு நாட்டையும் ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை. நாடு பலவீனமாக இருக்க முடியாது. பலமான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.
சக்தி பாதுகாப்புக்கும், உங்களின் சொந்த பாதுகாப்புக்கும் ஏனையவர்களை நம்பியிருக்க முடியாது. உங்களுக்கான எல்லா தளபாடங்களுக்கும் வெளிநாடுகளில் தங்கியிருக்கக் கூடாது.
சிறந்த கடற்படையைக் கொண்ட நாடுகள் தான் உலகை ஆட்சி செய்துள்ளன.
அதனால் தான் இன்று எமது அயல்நாடுகள், இந்தியப் பெருங்கடலிலும் ஏனைய பகுதிகளிலும், தமது கடற்படையை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றன. (சீன நீர்மூழ்கிகள் சிறிலங்காவில் தரித்து நின்றதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்)
அவர்களைப் பற்றிய எல்லாத் தரவுகளையும் கடற்படைக்குக் கிடைப்பதை இந்த தகவல் முகாமைத்துவ ஆய்வு நிறுவனம் உறுதி செய்யும்.
முன்னெச்சரிக்கை உணர்வு மிகவும் முக்கியமானது. தவறுகளை இல்லாமல் செய்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். தவறுகளில்லாமை மிகவும் முக்கியம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.