மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாட்டு மீனவர்களும் விரைவில் இந்தியச் சிறைக்கு மாற்றம்?
கொழும்பு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும், விரைவில் இந்தியச் சிறை ஒன்றுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தியதாக மரணதண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்களான, எமர்சன். அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெற் ஆகிய ஐந்து மீனவர்களுமே, இந்தியச் சிறைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும், சிறிலங்கா கைதிகளுக்குப் பதிலாக இவர்களை சிறிலங்கா அரசாங்கம் பரிமாற்றம் செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், மரணதண்டனைக் கைதிகளைப் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் எந்த உடன்பாடும் இல்லை.
இந்த மீனவர்களின் தண்டனையை சிறிலங்கா அதிபர் குறைத்தால் மட்டுமே, கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
இதற்கிடையே, இன்று இந்த மீனவர்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தினால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.