இந்தியா, அமெரிக்காவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, அமெரிக்காவும் இந்தியாவும், இன்னும் தெளிவானதும், காத்திரமானதுமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையில்,
‘கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்காவில் சீனாவின் தலையீட்டைக் குறைப்பதற்காக, அமெரிக்காவின் தலையீட்டை அதிகமாக காண முடிந்தது. ஆனால், இப்போது தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்கவே முன்னுரிமை கொடுக்கிறது.
சில நாடுகள் சிறிலங்காவில் ஏனைய நலன்களிலேயே கவனம் செலுத்துகின்றன.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
தமிழர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல்தீர்வு ஒன்றை அவர்களுக்குப் பெற்றுத் தரும் பொறுப்பு சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவுக்கு உள்ளது.
13ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறியுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்படுவது, இந்தியாவினதும், ஏனைய சில நாடுகளினதும் பாதுகாப்புக்கு நல்லது.
ஒன்றுபட்ட- பிரிக்கப்படாத இலங்கைக்குள்ளேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்க்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.