சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க கடற்படை தளபதி பேச்சு
அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. கோஹ்லர், பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து இதன்போது, கவனம் செலுத்தப்பட்டது.
அதிகரித்து வரும் கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கு, நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
கடல்சார் கள விழிப்புணர்வில் கூட்டு முயற்சி மற்றும் தகவல் பகிர்வை மேம்படுத்துதல், இயற்கை பேரழிவுகள் மற்றும் மனிதாபிமான சவால்களுக்கு பதிலளிப்பதற்கான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
சட்டவிரோத கடத்தல் மற்றும் ஏனைய பாரம்பரியமற்ற பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், சிறிலங்காவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்க பசுபிக் கட்டளை தளபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பயிற்சி பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுஸ் உள்ளிட்ட சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

