சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டது முதல் விமானம்
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளது.
எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் ATR 72-600 விமானமே யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
சென்னை விமான நிலையத்தில் நடந்த தொடக்க நிகழ்வை அடுத்து, இன்று காலை 8.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும்.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் இன்று முற்பகல் 10 மணியளவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதையடுத்து, முதலாவதாக சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயர் விமானம் தரையிறங்கும்.
இந்த விமானத்தில், எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லொஹானி, அலையன்ஸ் எயர் தலைமை நிறைவேற்று அதிகாரி சுப்பையா, உள்ளிட்ட 30 பேர் பயணம் செய்கின்றனர்.