மேலும்

போர்க்குற்ற விசாரணை குறித்துப் பேச சிறப்புத் தூதராக ஜெனிவா செல்கிறார் ஜயந்த தனபால

Jayantha Dhanapalaஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா அதிபரின் மூத்த வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நாளை ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, ஜயந்த தனபால புதிய அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

ஐ.நா விசாரணையாளர்கள் சிறிலங்கா வருவதற்கு கடந்த ஆண்டு அனுமதி கோரியிருந்தனர். ஆனால் முன்னைய அரசாங்கம் அதற்கு அனுமதி மறுத்து விட்டது.

அதேவேளை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணை ஒன்றை புதிய அரசாங்கம் நடத்தவுள்ளதாக, வெளிவிகார அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐ.நாவுடன் நிச்சயமாக ஒத்துழைப்போம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

”ஐ.நா விசாரணைக் குழுவினர், சிறிலங்கா வருவதற்கு புதிய கோரிக்கை எதையும் விடுக்கவில்லை.

எனினும், இந்த விசாரணைகள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்தித்து பேச்சு நடத்துமாறு, சிறிலங்கா அதிபரின். மூத்த ஆலோசகர் ஜயந்த தனபாலவைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

நிச்சயமான இது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஆனாலும், நாம் எவ்வாறு தொடர்ந்து இதனை முன்னெடுக்கவுள்ளோம் என்பதை, ஜயந்த தனபால ஜெனிவாவில் இருந்து திரும்பிய பின்னர் தான் உறுதியாக கூற முடியும்.

முன்னைய அரசாங்கத்தின் குறைபாட்டினால் தான் இந்த விசாரணைக்கு நாடு முகம் கொடுக்க நேரிட்டது.

கவனமாகவும், யதார்த்தமாகவும், இந்த விவகாரம் கையாளப்பட்டிருந்தால், இந்த விசாரணையை தவிர்த்திருக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *