மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்துப் பேச பிரசெல்ஸ் செல்கிறார் மங்கள சமரவீர
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதிக்கு சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள தடையை பிற்போடக் கோரும் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை பிரசெல்ஸ் செல்லவுள்ளார்.
சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடைமயை குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிற்போடுமாறு தாம் பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை வரும் செவ்வாய்க்கிழமை புதிய அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது,
இந்த சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைச் சுட்டிக்காட்டியே மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றியத்திடம் காலஅவகாசம் கோரத் திட்டமிட்டுள்ளார்.
எனினும், கடந்த 14ம் நாள் தொடக்கம் சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன் ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
முன்னதாக, புதிய அரசாங்கம் பதவியேற்றதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி தடையை ஆறுமாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறும், அதற்குள் நிபந்தனைகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் எற்றுமதி தடை சிறிலங்காவின் மீன்பிடித்துறையை பெரிதும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது மிகப் பெரிய நாடாக சிறிலங்காவே இருந்து வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு 74 பில்லியன் யூரோ பெறுமதியான மீன்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா ஏற்றுமதி செய்திருந்தது.