சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
சிறிலங்கா பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர், இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஐதேகவின் 33 உறுப்பினர்கள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ள சூழலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், தாம் பதவி விலகப் போவதில்லை என்றும், சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டால் மாத்திரமே பதவி விலகப் போவதாகவும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.