கோத்தா ‘கொலைகாரன்’ , பசில் ‘மோசடிக்காரன்’ – மேர்வின் சில்வா முறைப்பாடு
படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஊழல், மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் கோத்தாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்டதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்ற மேர்வின் சில்வா, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்ட குற்றச்செயல்கள் தொடர்பான முறைப்பாடு ஒன்றை செய்தார்.
இவர்களால் இழைக்கப்பட்ட இந்தக் குற்றச்செயல்களை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நன்கு அறிவார் என்றும், ஆனால் அவர் இன்னமும் அமைதியாக இருப்பதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் அமைதியாக இருப்பதால் தான், முறைப்பாட்டைப் பதிவு செய்ய தான் முன்வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதால், தானும் தனது குடும்பமும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆனாலும் தான் அதற்குப் பயப்படவில்லை எனவும் மேல்வின் சில்வா கூறியுள்ளார்.
இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்ய தான் எடுத்த முடிவுக்குக் காரணம் பழிவாங்கும் நோக்கம் அல்ல எனவும், ஆனாலும் தன்னை பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் பழிவாங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் சமர்ப்பித்துள்ள ஆவணங்களில், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர ஆகியோரின் படுகொலைகள் குறித்த விபரங்களும் உள்ளடங்கியுள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்ச இந்தச் சம்பவங்களுடனும், வெள்ளைவான் கடத்தல்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் மேர்வின் சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும், ஊழல்,மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திவிநெகும திட்டத்தில், பசில் ராஜபக்ச 6000 மில்லியன் ரூபாவை கையாடல் செய்துள்ளதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.