இந்தியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று ஆரம்பமாகும் தர்ம தம்ம மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காகவே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியா செல்லவுள்ளார்.
இன்று தொடக்கம் எதிர்வரும் 13ஆம் நாள் வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் இடம்பெறும். இதில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதம விருந்தினராக பங்கேற்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பீகார் மாநில ஆளுனர் சத்யபால மாலிக், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஸ்குமார், இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்குப் பிராந்தியத்துக்கான செயலர் பிரீதி சரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் திலக் மாரப்பன இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.