சீனாவுக்குச் செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நாளை மறுநாள் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியின் அழைப்பை ஏற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, எதிர்வரும் ஒக்ரோபர் 29ஆம் நாள் தொடக்கம் நொவம்பர் 4ஆம் நாள் வரை, சீனாவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது திலக் மாரப்பனவின் சீனாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணம். அவரது பயணத்துக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனத் தலைவர்கள் திலக் மாரப்பனவைச் சந்திக்கவுள்ளனர். இருதரப்பு உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்பார்.” என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.