இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைக்கான கால எல்லை இன்று நள்ளிரவு முடிவுக்கு வந்த பின்னர், எல்லா அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாகவோ, அல்லது, எதிராகவோ பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்கும், இந்த தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இன்று நள்ளிரவுடன் பரப்புரைகள் நிறைவடையவுள்ளதால், இரண்டு பிரதான வேட்பாளர்களும், தமது பிரமாண்டமான இறுதிப் பரப்புரைக் கூட்டங்களை கொழும்பில் நடத்தவுள்ளனர்.
இறுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், அரசதரப்பிலுள்ள பல முக்கிய பிரமுகர்கள், எதிரணியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.