மேலும்

ஆதிக்கத்துக்கு எதிராக ஆவேசக் குரல் கொடுத்த மக்கள் கவிஞர் இன்குலாப் – சில நினைவுக்குறிப்புகள்

ingulab-1எல்லா விதமான ஆதிக்கம், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுத்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப். ஈழவிடுதலைப் போராட்டத்தை வாஞ்சையோடு நேசித்தவர். முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய அரசின் விருதை வேண்டாம் என்று ஒதுக்கியவர்.

அடங்காத தமிழ்ப் பற்றும், விடுதலைப் பற்றும் கொண்ட கவிஞர் இன்குலாப் நினைவாக, மூன்று நினைவுக் குறிப்புகளை புதினப்பலகை இங்கு பதிவு செய்கிறது. இவற்றில் ‘முகிலன்’ எழுதிய குறிப்பு புதினப்பலகைக்கானது. எஸ்.வி.ராஜதுரை எழுதிய குறிப்பு, ‘தி இந்து’ நாளிதழிலும், ரவிக்குமார் எழுதிய குறிப்பு பிபிசி தமிழோசையிலும் வெளியானவை.

இன்குலாப்: ஆதிக்கத்துக்கு எதிரான ஆவேசக் குரல்- எஸ்.வி.ராஜதுரை

சில்லென்று நெருஞ்சிக் காடே!

சிரிக்காதே:

உன் மீது

கால்கள் அல்ல –

களைக்கொத்திகளே இனி நடக்கும்

எங்களைப்

பிறாண்டிச் சிவந்த உன் நகங்களை நீட்டாதே

ஏனெனில் வெட்டப்படுவது இனிமேல்

நகங்களல்ல –

விரல்கள்.

வர்க்க, சாதிய, மத, பண்பாட்டு வகைகளில் ஒடுக்கி வருவோருக்கு எதிராகப் போராடும் சக்திகளுக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக இன்குலாப் வழங்கிவந்த போர்க்குரலின் சாரம் இது. அந்த சாரம் ப்ரெஹ்ட்டிலிருந்து லாங்ஸ்டன் ஹ்யூஸ் வரை, மஹ்மூத் தார்விஷிலிருந்து நஸிம் ஹிக்மெத் வரை, பாரி மகளிரிலிருந்து அமெரிந்தியத் தலைவர் சீயாட்டில் வரை பல்வேறு மூலாதாரங்களிலிருந்து வடித்தெடுக்கப்பட்டவை என்பதை இன்குலாபின் படைப்புகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் படிப்பவர்களுக்குப் புரியும். “மனுசங்கடா – நாங்க மனுசங்கடா, ஒன்னைப் போல அவனைப் போல எட்டுச் சாணு ஒசரமுள்ள மனுசங்கடா -டேய் மனுசங்கடா”என்று ஆதிக்க சாதிகளுக்கு எதிரான தலித் மக்களின் கோபாவேசக் குரலைப் புரட்சிப் பாடகர் கே. ஏ.குணசேகரன் வழியாகத் தமிழகமெங்கும் எதிரொலிக்கச் செய்த இன்குலாப், இடதுசாரி அரசியலில் தலித்துகள் தலைமைப் பாத்திரம் வகிக்கும்போதுதான் இந்தியாவில் புரட்சி வெற்றி பெறும் என்னும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தவர்.

பன்னூறாண்டுக்காலத் தமிழகப் பண்பாட்டு மரபில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சொல்லப்பட்டவை எவையோ அவற்றை மட்டுமே சலித்தெடுத்துக்கொண்டவர். சதுர்வேதி மங்கலங்களையும் தேவதாசி முறையையும் போற்றி வளர்த்த ராஜராஜசோழனைப் பற்றிய கவிதை சென்னைப் பல்கலைக் கழகப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப் படுவதற்கு அப்போது ஆட்சியிலிருந்த அதிமுகவையும் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவையும் இணைத்துவைத்தவர்!

சொல்லுக்கும் செயலுக்குமிடையே மிகச் சிறிய இடைவெளியோடுதான் அவரது வாழ்க்கை கழிந்திருக்கிறது. மார்க்ஸிய-லெனினிய இயக்க ஈடுபாடு, அவரது குடும்பம் கிட்டத்தட்ட நடுச்சந்தியில் நிற்க வைக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இரு மகன்களையும் பள்ளி இறுதி வகுப்புக்கு மேல் அவரால் படிக்க வைக்க முடியவில்லை. கனிவு நிறைந்த அவரது துணைவியாரின் ஒத்துழைப்பின்றி அவரது ஒரே மகளால், மருத்துவப் படிப்புப் படித்திருக்க முடியாது.

ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு பிணைத்துக் கொண்டவர். தமிழக மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கங்களோடு, மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தோடு உற்சாகத்தோடு பணியாற்றியவர். மத அடிப்படைவாதங்கள் அனைத்தையும் எதிர்த்தவர். தாம் பிறந்த இஸ்லாமிய சமுதாயத்திலும், பெண்ணடிமைத்தனமும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை எடுத்துக்காட்டியதற்காக அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் கடுமையாக அவதூறுசெய்யப்பட்டவர். அதேபோல, அதிகாரபூர்வமான கிறித்தவ திருச்சபை சாதிய ஒடுக்குமுறைக்குத் துணை போவதை ‘மீட்சி’நாடகத்தில் வெளிப்படுத்தியவர்.

தமிழ் நவீன நாடகத்திற்கு அவர் வழங்கிய முக்கியப் பங்களிப்பு உரிய அங்கீகாரம் பெறவில்லை. சங்க இலக்கியத்தையும் ஐம்பெரும் காப்பியங்களையும் அவர் மறுவாசிப்புக்கு உட்படுத்தியதின் விளைவே ‘ஒளவை’. ‘குறிஞ்சிப் பாட்டு’, ‘மணிமேகலை’ ஆகிய நாடகங்கள். உலகு தழுவிய விழுமியங்களைக் கொண்டிருப்பவை அவை.

ஆழ்ந்த அழகியல் உணர்வும் இசை நாட்டமும் கொண்டவர்; பறவைகளைப் பார்த்துப் பரவசப்படுபவர். எல்லாவற்றுக்கும் மேலாக, அற்புதமான மனிதநேயர். மோகனப் புன்னகையால் அனைவரையும் கவர்ந்திழுத்த அவர் கடைசிக் கொடையாகத் தமது உடலை மருத்துவமனைக்கு விட்டுச் சென்றிருக்கிறார். “எரியும் ஒரு விளக்குத் திரியிலிருந்து அம்மா வீட்டில் எல்லா விளக்குகளையும் ஏற்றுவாள்” என்னும் வெளிநாட்டுப் பழமொழியை அவர் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு.

(எஸ்.வி.ராஜதுரை- மார்க்ஸிய ஆய்வாளர், எழுத்தாளர், ‘தலித்தியமும் உலக முதலாளியமும்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்)

ingulab-2

இன்குலாப்: காலம் கடந்தும் வாழும் பேறுபெற்றவர்- முகிலன் (பிரான்ஸ்)

‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ என்று பட்டி தொட்டி எங்கும் பரவிய வார்த்தைகளை வடித்த மக்கள் பாவலர் ஞானக் கவி இன்குலாப் காலம் ஆகிவிட்டார்.

அரசுகளால் புறந்தள்ளப்பட்ட ஆனால் மக்கள் கவிஞனாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த பெருமையை உடையது இவரது வாழ்வின் தடம். இசுலாமிய தமிழான வாழந்த இவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது என்பது மிகவும் கவனத்திற்குரிய அரிய செயலாகும். மனித நேயக் கவியாளனாக வாழ்ந்த கவிஞர் இன்குலாப் காலம் கடந்தும் வாழும் பேறுபெற்றவர்.

பிறப்பால் இசுலாமியத் தமிழராகப் பிறந்தாலும்இ தனது மத அடையாளங்களை துறந்து மக்களுக்கான போராட்டங்களின்பால் தன்னை இணைத்து சாகுல் அமீது என்ற தனது இயற்பெயரை ‘இன்குலாப்’ என்று விடுதலையின் குறியாகப் பொறித்து வாழ்ந்து மறைந்த வாழ்வு இவருடையது.

காலத்தால் அழியாத படைப்புகளை இவர் பதிந்துள்ளார்.  கவிஞர் இளவேனில் நடத்திய ‘கார்க்கி’ இதழில் கவிஞர் ‘இன்குலாப்’பின் தொடக்கக் கவிதைகள் வெளிவந்தன. பின்னர் தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார்.

‘வாழ்க்கைத் தடம்’ எனும் தொடர் கட்டுரைகளை தனது இறுதிக் காலத்தில் காக்கைச் சிறகினிலே இதழில் பதிவு செய்துள்ளார். சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ‘மார்க்சு முதல் மாசேதுங் வரை’ என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள்.

மனுசங்கடாஇ நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகிய நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.

இவர் பெற்ற விருதுகள்- சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது.

2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (குறள் 114)

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயணத்தைத் தொடரும் காக்கைச் சிறகினிலே மாத இதழில் தொடக்கம் முதல் இறுதிக்காலம் வரையில் தனது பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தவர் இன்குலாப். மக்கள் கரிசனையுடன் சிந்தனைகளைத் தொடர்ந்த இவரது எண்ணங்கள் இவரது கையால் தமிழ் எழுத்தோவியமாக பதியமாயிற்று. இத்தகைய அரிய கை ஓய்ந்துவிட்டது.

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க

இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா – அட

உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா

நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது

தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த

ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது

எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க

எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா”

ingulab-3

இன்குலாப்: பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர் – ரவிக்குமார் துரை

 சொற்களை நெருப்புத் துண்டங்களாக்க முடியுமா? ஆயிரம் அறிவுரைகளால் தலை நிமிராத மக்களை ஒரு பாடலால் உசுப்பிவிட முடியுமா? முடியும் என நிரூபித்தவர் கவிஞர் இன்குலாப்.

திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1965 ல் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைப் புரட்டிப்போட்ட மொழிப்போராட்டத்தில் பங்கேற்றுத் தனது கருத்தியல் பிரச்சாரத்துக்கு உவப்பான கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட பலர் 1967 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதிகார அமைப்பின் ஆதரவாளர்களாகத் தேங்கிப்போயினர். ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கீழ் வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்டபோது அதைக் கண்டிக்காமல் மௌனம் காத்தனர். ஒருசிலர் அந்த சம்பவத்தால் மார்க்சியத்தை நோக்கித் திரும்பினர். அத்தகைய சிலரில் ஒருவராக இருந்தவர் இன்குலாப்.

‘இந்தியாவின் ஆளும் வர்க்கம் என்பது காலனியமும் நிலப்பிரபுத்துவமும் கலந்து உருவானது. இங்கே ஓர் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அது பாராளுமன்ற அரசியலால் மட்டும் சாத்தியமாகாது’ என்ற புரிதலோடு கிராமப் புறங்களில் நிலமற்ற கூலி விவசாயிகளிடையே அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை இன்குலாப் ஆதரித்தார்.

1970 களின் முற்பகுதியில் உருவெடுத்த வானம்பாடி கவிதை இயக்கத்தில் ஒருவராகத் துவக்கத்தில் அறியப்பட்ட இன்குலாப் மிகக் குறுகிய காலத்திலேயே அதிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டார். ஆனால் ,

” இதயம் குமுறும் நீக்ரோ – கையில்

ஏந்தும் கறுப்புத் துப்பாக்கியால்

ஆஞ்சலா டேவிஸ் புகைகின்றாள் – வெள்ளை

ஆதிக்க முகத்தில் உமிழ்கின்றாள்”

என அவரது ‘வெள்ளை இருட்டு ‘ தொகுப்பில் இடம்பெற்ற துவக்க காலக் கவிதைகளில் வானம்பாடி இயக்கத்தின் தடம் பதிந்தே இருந்தது.

விடுபட்ட பிரச்சனைகளை எழுதியவர்

திராவிட இயக்கத்தால் உந்தப்பட்டவர் என்றாலும் அந்த இயக்கத்தின் கவனத்திலிருந்து விடுபட்டுப்போன பெண் விடுதலை, தலித் பிரச்சனை முதலானவை குறித்து ஆரம்பகாலம் தொட்டே கவிதைகளை எழுதி வந்தவர் இன்குலாப். அவரது அந்தக் கருத்தியல் சார்புதான் ‘கண்மணி ராஜம்’ ஸ்ரீ ராஜராஜேச்சுவரம்’ முதலான கவிதைகளை அவர் எழுதக் காரணமாக அமைந்தது.

‘கண்மணி ராஜம்’ கவிதை பாடநூல் ஒன்றிலிருந்து நீக்கப்பட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. அதுபோலவே ராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாளை தமிழக அரசு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தபோது அதை விமர்சித்து இன்குலாப் எழுதிய ’ராஜராஜேச்சுவரம்’ கவிதையும் போராட்டங்களுக்குத் தூண்டுகோலானது. அக்காலங்களில் திமுக ஆட்சியின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இன்குலாப் அறியப்பட்டார்.

ஈழப் பிரச்சனையும் இன்குலாப்பும்

1980 களின் முற்பகுதியில் ஈழப் பிரச்சனை தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. ‘கறுப்பு ஜூலை’ என ஈழத் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் 1983 ஆம் ஆண்டு கலவரத்தைப் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கொதித்தெழச் செய்தன.

அந்த நேரத்தில் சிங்களப் பேரினவாத வன்முறையைக் கண்டித்த தமிழகத்து மரபான இடதுசாரிக் கட்சிகள் அந்த வன்முறைக்கு எதிர்வினை புரிவதாக ஈழத் தமிழரிடையே முகிழ்த்த ஆயுதக் குழுக்களை ஆதரிக்க மறுத்தன.

அதனால் தமிழ்த் தேசியத்துக்கு இடதுசாரிகள் எதிரானவர்கள் என்பதுபோன்ற கருத்து பரவியது.

அந்த அவப்பெயரை மாற்றும் விதமாக தேசிய சுய நிர்ணய உரிமை குறித்த மார்க்சிய லெனினிய கருத்தாக்கங்களை முன்வைத்து ஈழத் தமிழர் பிரச்சனையில் ஆதரவான நிலைபாட்டை எடுத்த இடதுசாரிகள் மிகச்சிலரில் இன்குலாப்பும் ஒருவர்.

இட ஒதுக்கீடும் இன்குலாப்பும்

ஈழப் பிரச்சனைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டு இடதுசாரிகளின் கருத்தியலை சோதிப்பதாக ‘மண்டல் பரிந்துரை அமலாக்கம்’ அமைந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என வலதுசாரி சக்திகள் பெரும் கலவரங்களில் இறங்கின. அந்த நேரத்திலும்கூட இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே மைய நீரோட்ட இடதுசாரிகள் மேற்கொண்டனர்.

ஆனால் மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்றுக்கொண்ட இன்குலாப் முதலான சில இடதுசாரி அறிவுஜீவிகள்தான், மண்டல் குழு பரிந்துரை அமலாக்கப்பட்டத்தை ஆதரித்துக் களமிறங்கினர்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கப் பற்றாளர்களும் இடதுசாரி அறிவுஜீவிகளும் ஒன்றுபட்டு நிற்பதற்கு வழிவகுத்த அபூர்வமான தருணம் அது. அந்தப் பிணைப்பு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மேலும் வலுப்பெற்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் வேரூன்ற இடம் தராமல் இன்றளவும் தடுத்துக்கொண்டிருப்பது அந்தப் பிணைப்புதான்.

இன்குலாப் செவ்வியல் இலக்கியம் முதல் நவீனத் தமிழ் இலக்கியம்வரை ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்.

ஆனால் தமிழுக்கு உரிமை கொண்டாடிய புலவர் மரபைச் சேர்ந்தவர்களைப்போல மொழியின் வழிபாட்டாளாரக இல்லாமல் தமிழ் மொழியையும், இலக்கிய மரபுகளையும், பண்பாட்டையும் கேள்விக்குட்படுத்துகிற விமர்சன குணம் அவரிடம் இருந்தது.

1980 களின் பிற்பகுதியில் ஈழத் தமிழ்க் கவிதைகள் தமிழ்நாட்டில் அதிகம் பதிப்பிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல் கவிதைகளை அழகியலோடு எழுத முடியும் என அவை உணர்த்தின.

அதற்கு முன்னதாகவே வானம்பாடிக் கவிஞர்களின் ‘ரொமாண்ட்டிக்’ பாணியிலிருந்து விடுபட்டு அரசியல் கவிதைகளை அழகியலோடு சொல்ல முற்பட்டவர் இன்குலாப்.

மத அடையாளம் தவிர்த்த பகுத்தறிவாளர்

அது மட்டுமின்றி ஒரு படைப்பாளி அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் போராளியாகவும் இருக்கவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

தான் பிறந்த இஸ்லாமிய மத அடையாளத்தைத் தவிர்த்து ஒரு பகுத்தறிவாளராகவே வாழ்ந்தவர். அதனால்தான் ,

” சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளி தோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!”

என்று அவரால் பாட முடிந்தது.

பெரியாருக்குப் பிறகான திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட பென்ணுரிமை, தலித் பிரச்சனை – ஆகிய இரண்டையும் தொடர்ந்து முக்கியத்துவம் தந்து பேசிவந்தவர் இன்குலாப். அவர் எழுதி கே.ஏ.குணசேகரன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட ‘மனுசங்கடா’ என்ற பாடல் இப்போது தலித்துகளின் புரட்சி கீதமாக போற்றப்படுகிறது. அவரால் எழுதப்பட்டு மங்கை அவர்களால் மேடையேற்றப்பட்ட ஔவை, மணிமேகலை ஆகிய நாடகங்கள் பெண்ணியப் பிரச்சனையை மிகவும் நுட்பமாகப் பேசுபவை.

மரபான இடதுசாரிகளால் புறக்கணிக்கப்பட்ட ஈழத் தமிழர் பிரச்சனையில் சரியான நிலைபாட்டை மேற்கொண்டிருந்தவர் அவர். தமிழ்த் தேசியவாதிகளில் ஒருவராக அடையாளம் காணப்படக்கூடிய அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டியவர். ஆனால் இப்போது அடிப்படைவாதமாக சுருக்கப்படும் தமிழ்த் தேசியத்துக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லை. அவர் எழுதிய ‘ என் பெயர் மருதாயி ‘ என்ற கவிதையைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

“அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!

உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த

காலகாலமாய் நானும் நடக்கிறேன்

கற்புத் தோன்றிய அன்றைக்கே

நானும் தோன்றிவிட்டேன் –

தாய்மொழி – தமிழ்

பெயர் – மருதாயி

தொழில் – பரத்தை”

என்று முடியும் அக்கவிதையைப் பண்பாட்டுக் காவலர்களால் எப்படி சகித்துக்கொள்ளமுடியும்?.

தமிழ்நாட்டில் அரசவைக் கவிஞர்கள் இருக்கிறார்கள், தன் முன்னேற்றக் கவிஞர்கள் இருக்கிறார்கள், இலக்கியமே எமது குறி என்று அரசியல் வாடைபடாத புனிதக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே அரசாங்கத்தால் பாராட்டி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் இன்குலாப் எந்தவொரு அரசு அங்கீகாரத்தையும் பெறவில்லை.

” வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை

பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை”

அரசு அங்கீகரிக்கும் என பாரதியை நோக்கி எழுதுவதுபோல ஒரு கவிதையில் இன்குலாப் எழுதினார். அரசு அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதன் பொருள் அவர் பிணமாக வாழவில்லை என்பதுதான். அந்த மகத்தான மக்கள் கலைஞனுக்கு என் அஞ்சலி

(கட்டுரையாளர் கவிஞர், மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *