நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து- சட்டம் நிறைவேறியது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டம், இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஓய்வூதிய (ரத்து) சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களாக ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
சட்டத்தின் பின்னோக்கிய விளைவை நீக்குதல் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை அனுமதித்தல் ஆகியன திருத்த முன்மொழிவுகளே நிராகரிக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, 152 உறுப்பினர்கள் அதற்கு எதிராகவும் நான்கு உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இரண்டாவது வாசிப்பின் போது, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.
இந்தச் சட்டம் மூன்றாவது வாசிப்பின் போது, வாக்கெடுப்பு இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டது.
