சங்க மாநாடு – இரண்டு பௌத்த பீடங்களுக்கு அழைப்பு இல்லை
பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் அநீதிகள், புத்தசாசனம், நாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள சங்க மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என இரண்டு பௌத்த பீடங்கள் அறிவித்துள்ளன.
சிறிலங்காவின் மூன்று முக்கிய பௌத்த பீடங்களில் இரண்டு, சங்க மாநாட்டில் அதிகாரப்பூர்வ மட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன.
இந்த மாநாட்டிற்கு அஸ்கிரிய பீடத்திற்கு அழைப்பு வரவில்லை என்று, சியாம் பிரிவு அஸ்கிரிய உச்ச சங்க மன்றச் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், தெரிவித்துள்ளார்.
முறையான அழைப்பின்றி பங்கேற்பது குறித்து முடிவு செய்ய முடியாது. இருப்பினும், தனிப்பட்ட துறவிகள் கலந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
அதேபோன்று, அமரபுர பீடத்துக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அதன் செயலாளர் வண. பலாப்பிட்டிய சிறி சீவலி தேரர், தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை. நாங்கள் அதிகாரப்பூர்வ மட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், அந்தந்த பீடத்தின் மகாநாயக்கர் கலந்து கொள்ள வேண்டும்.
எந்த பௌத்த துறவியும் கலந்து கொள்ளலாம், ஆனால், எந்த அதிகாரப்பூர்வ வருகையும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 20ஆம் நாள் – வெள்ளிக்கிழமை – கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைமையகத்தில் இந்த சங்க மாநாடு நடைபெற உள்ளது.
