2025 இல் பலாலி விமான நிலையம் புதிய சாதனை
2025 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஊடாக, 53,443 அனைத்துலக பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விமான நிலையம் ஊடாக, கடந்த ஆண்டில்,1,138 அனைத்துலக விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர், அதிகபட்ச விமான இயக்கங்கள் மற்றும் அதிகபட்ச பயணிகள் பயணம் மேற்கொண்ட ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
அத்துடன் 2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் விமான நிலையம் பல வரலாற்று மைல் கற்களைக் அடைந்துள்ளது.
மலேசியா, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து மூன்று அனைத்துலக வாடகை விமானங்கள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்தன.
அத்துடன், ஹைதராபாத்திலிருந்து முதல் அனைத்துலக மருத்துவ மீட்பு வாடகை விமானமும் இயக்கப்பட்டது.
அத்துடன் விமான நிலையம் முனைய விரிவாக்கத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுடன் கடந்த ஆண்டு இடம்பெற்றது.
மேலும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, அனைத்துலக மற்றும் உள்ளூர் பங்காளர்களின் நிவாரணப் பொருட்களை ஏற்றிய அமெரிக்க விமானப்படை உள்ளிட்ட விமானங்களும் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியிருந்தன.
