அமெரிக்காவில் உள்ள ஷமிந்திர ராஜபக்சவைக் கைது செய்ய உத்தரவு
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்சவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் உள்ள ஷமிந்திர ராஜபக்சவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறிலங்கன் விமான சேவைக்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் ஊழல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் வழக்கில், ஷமிந்திர ராஜபக்ச மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதை அடுத்து, கோட்டை நீதிவான் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிப்பதாகக் கூறப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய அனைத்துலக காவல்துறை உதவியைப் பெறவும், சிவப்பு அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கவும் கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரகே உத்தரவிட்டுள்ளார்.
விமானக் கொள்வனவின் போது இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 260 மில்லியன் ரூபா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அதிபர் தேர்தல் பரப்புரைக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
