உள்கட்டமைப்புகளை மீளமைக்க சீனாவிடம் உதவி கோரும் சிறிலங்கா
அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் (CPAFFC) தலைவர் யாங் வான்மிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, நேற்று கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துப் பேச்சு நடத்தியது.
இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்த யாங் வான்மிங், சிறிலங்காவுடனான சீனாவின் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் சார்பில், சுமார் 82 ஆயிரம் டொலர் கொடையையும், அவர் வழங்கினார்.
டிட்வா சூறாவளி உள்ளிட்ட அவசரகாலங்களின் போதான சீனாவின் தொடர்ச்சியான உதவிக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து ஏனைய உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

