நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை முன்கூட்டியே இடைநிறுத்தம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான, பயணிகள் கப்பல் சேவை முன்கூட்டியே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதகமான வானிலை காரணமாக, இன்று ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கும், 28 ஆம் திகதிக்கும் இடையில் திட்டமிடப்பட்ட பயணங்களை ரத்து செய்வதாக சுபம் கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
வானிலை சூழல் காரணமாக ஒக்டோபர் 28 ஆம் திகதிக்குப் பின்னர் படகுச் சேவையை நிறுத்தி வைப்பதற்கு குறித்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
எனினும் வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இன்றுமுதல் கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி, தெரிவித்துள்ளார்.
இடைநிறுத்தப்படும் காலத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், படகின் ஆசனங்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 186 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
