சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்கா தொடர்ந்து பயிற்சி
ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், சிறிலங்கா கடற்படையின் முதலாவது குழுவுக்கு அமெரிக்க கடற்படையினர் சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.
அமெரிக்க கடற்படையினால், நிபுணத்துவ பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிறிலங்கா கடற்படையின் 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும் சிறப்பு படகு அணி ஆகியவற்றைச் சேர்ந்த கடற்படையினர் 35 பேருக்கு, ‘Naval Special Warfare Maritime Security Course 2019′ என்ற இரண்டு வாரகாலப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் நாள் ஆரம்பமாகிய பயிற்சிகள், நேற்று நிறைவடைந்ததுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியைச் சேர்ந்த 24 பேரும், 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த 11 பேரும் இந்தப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு படகு குழுவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் பயிற்சிகளை அளித்தனர்.
கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்காவில் அமெரிக்க நிபுணர்களினால் அளிக்கப்பட்ட முதலாவது பயிற்சி நெறி இதுவாகும்.