நிசாந்த சில்வாவை நாடு கடத்துமாறு கோரவுள்ள சிறிலங்கா
முன்னறிப்பு இல்லாமல் சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வாவை நாடு கடத்துவது குறித்து கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளது.
உயர்மட்ட அரசாங்க வட்டாரம் ஒன்று இந்த தகவலை கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் குற்ற விசாரணைப் பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, நிசாந்த சில்வா, குடும்பத்துடன் சுவிற்சர்லாந்துக்கு தப்பிச் சென்றார்.
சுவிசுடன் சிறிலங்கா வலுவான உறவுகளைப் பேணினாலும், பல உயர்மட்ட விசாரணைகளுடன் நிசாந்த சில்வா தொடர்புபட்டுள்ளதால், அவரை நாடு கடத்துமாறு சுவிற்சர்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.