எம்சிசி கொடை உடன்பாடு சாத்தியமில்லை
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்தின் கொடையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் கோருவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எம்சிசி கொடைக்கு சிறிலங்கா அரசாங்கம் செல்வது சாத்தியமில்லை என்று அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார்.
எம்சிசி உடன்பாடு, தற்போதைய நிலையில் நாட்டின் இறையாண்மையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, கொடைக்கான அடிப்படைகளை மாற்ற முடியாவிட்டால், எம்சிசி கொடை உடன்பாடு பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், அதனை மாற்றிக் கொள்ள அமெரிக்கா இணங்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எம்சிசி பிரதிநிதிகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இன்னும் சந்திக்கவில்லை என்றும், சரியான நேரத்தில் புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்றும், எம்சிசியின் சிறிலங்காவுக்கான வதிவிட பணிப்பாளர் ஜென்னர் எடெல்மென் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், டிசெம்பர் 9 ஆம் நாள், சிறிலங்காவுக்கான கொடையின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய எம்சிசி பணிப்பாளர் குழு கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.