சொந்த வீட்டிலேயே தங்கியிருக்கப் போகும் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, தமது பதவிக்காலத்தில் அதிகாரபூர்வ வதிவிடமான, அதிபர் மாளிகையிலோ அல்லது வேறு அரசாங்க வதிவிடங்களிலோ குடியேறுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
நுகேகொட, மீரிஹானவில் உள்ள தமது சொந்த வீட்டிலேயே, தொடர்ந்தும் தங்கியிருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க விவகாரங்களை நிறைவேற்றுவற்கு மாத்திரமே, அதிபர் மாளிகையை பயன்படுத்தப் போவதாகவும், வேறு எந்த அரசாங்க வதிவிடங்களும் தனக்கு தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், கோத்தாபய ராஜபக்ச அதிபர் செயலக ஆளணியை 2500 இல் இருந்து 250 பேராக குறைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் தமது பாதுகாப்பு வாகன அணியின் எண்ணிக்கையைக் குறைக்குமாறும், பயணங்களின் போது வீதித்தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,