மேலும்

ரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் முடிவு செய்துள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, புளொட் ஆகியன ஏற்கனவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருந்த நிலையில், ரெலோவின் முடிவு குறித்து ஆராய அதன் தலைமைக்குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் நடத்தப்பட்டது.

மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் சுமார் 6 மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ரெலோவின் துணைத தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சிறீகாந்தா உள்ளிட்ட தலைமைக்குழுவின் 15 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது தொடர்பாக, ஆராயப்பட்ட போது, வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, தலைமைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது, இதில் பெரும்பாலான உறுப்பினர்கள், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க விருப்பம் வெளியிட்டனர்.

இதன் அடிப்படையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்றிரவு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று, அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *