திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் யாழ். அனைத்துலக விமான நிலையம்
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, வரும் 17ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்காக, பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்தது.
இந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள், நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் எல்லா அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.