மேலும்

வரும் 14ஆம் நாள் பலாலியில் தரையிறங்குகிறது அலையன்ஸ் விமானம்

எயர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம், வரும் 14ஆம் நாள் பலாலி விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறங்கவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின் அடையாளமாகவே, அலையன்ஸ் எயர் விமானம் தரையிறங்கவுள்ளது.

சென்னையில் இருந்து வரும் முதல் விமானம் சுற்றுலாப் பயணிகளையும், வணிகப் பிரமுகர்களையும் யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலையன்ஸ் எயர் நிறுவனம் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மற்றும் தற்போது புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் மட்டக்களப்பு அனைத்துலக விமான நிலையங்களுக்கு சென்னையில் இருந்து சேவைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்புக்கான சேவைகள் விரிவாக்கப்படும் வரை சென்னை- யாழ்ப்பாணம் இடையில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, அலையன்ஸ் விமான நிறுவனம் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் இன்னமும் வெளியிடவில்லை. அந்த நிறுவனத்தின் விமானங்கள் பறக்கும் இடங்களின் பட்டியலில் இன்னமும் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *